top of page

மதுரையில் மீண்டும் ஒரு புட்டு கதை !



'பொன்னியின் செல்வன்' படத்தை பார்த்துவிட்டுச் சோழ நாட்டு ராஜாக்களின் சாதனைகளைப் பற்றி தமிழ் மக்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான 'மதுரையில்' நடந்த ஒரு உண்மை சம்பவத்தை நான் உங்களுக்குச் எடுத்துரைக்க உள்ளேன்.


மதுரையில் 'சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த கதை' உங்களுக்குத் தெரிந்திருக்கும்.இதுவும் மதுரையில் ஒரு புட்டு கடையில் நடந்த சம்பவமே.


வாருங்கள் பாண்டிய ராஜ்யத்திற்கு! கடந்த காலத்திலிருந்து தற்காலத்திற்கு பயணிப்போம்.


ஒரு மாலை பொழிதில், ஐடி வேலையை மதுரையில், வீட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த நம்மவர், ஆன்சைட்டில் பணிபுரியும் தனது சகாக்களிடம் ஸ்டேட்டஸ் காலில் என்ன கதை சொல்லலாம் என்றும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கொண்டும் இருந்த பொழுதில், மனதை அமைதி படுத்த சிறிது தூரம் நடந்து விட்டு வரலாம் என்று எண்ணினான்.


மதுரையை பொறுத்த வரை உங்களுக்கு நாவடக்கம் இல்லை என்றால் நீங்கள் எப்பொழுதும் சாப்பாடு ராமனாகவே இருக்க கூடும் , ஏன் என்றால் நீங்கள் தெருவில் உலா வந்தால் பார்க்கும் இடம் எல்லாம் உணவு கடைகளாகவேய தென்படும்.


வீட்டை விட்டு வெளியே வந்ததும் நம்மவருக்கு முதலில் தென்பட்டதோ தள்ளு வண்டியில் தென்னம் குருத்து கடை, அதற்கு பின்னால் ஒரு பஜ்ஜி கடையும் , 'பங்கார பாண் பைரி' என அழைக்கப்படும் சவுராஷ்டிரா மக்களின் கீரை வடை கடை. சிறிது தூரம் நடந்து சென்றதும் பருத்தி பால் விற்று கொண்டிருந்தார் ஒருவர்.மறுபுறம் ஜிகர்தண்டா கடை மற்றும் பால் பன் கடை.


வேகமா நடந்து சிறிது தூரம் சென்றதும் பல பரோட்டா கடைககளில் கம கம என்று சால்னா வாசமும் , கொத்து பரோட்டாவை கரண்டியால் கொத்த ஆரம்பிக்கும் சந்தமும் கேட்க ஆரம்பித்தது .


பல ஊர்களில் தற்போது food ஸ்ட்ரீட்கள் இருக்கலாம் , அனால் மதுரையில் எப்பொழுதும் அனைத்து தெருக்களும் food ஸ்ட்ரீட்கள் தான் என்று மனதில் எண்ணி கொண்டு நடந்தான்.


இந்த சமயத்தில் நம்மவர் படித்திக்கொண்டிருத புத்தகமோ "ஜென் : தி ஆர்ட் ஆப் சிம்பிள் லிவ்விங் " அதன் தாக்கத்தினால் ஏதேனும் ஒரு மிகவும் எளிமையான உணவாகவும் , காரமாக இல்லாத உணவாகவும் அதே நேரத்தில் சுவையானதாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டுஇருந்த சமயத்தில் கண்ணில் தென்பட்டது ஒரு புட்டு கடை.


முதல் பார்வையில் நம்மவர் மனதில் பட்டதோ சின்ன கடையாக இருந்தாலும் மிக சுத்தமாக பாரம்பரிக்க பட்ட புட்டு கடை , தேவையான பொருட்கள் தவிர வேறு எந்த பொருளும் இல்லை. இரண்டு புட்டு குழலில் புட்டு வேக வைத்து கொண்டிருந்தார் கடை முதலாளி. ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்திருந்தார் , வாடிக்கையாளர்களை புன்னகை முகத்துடன் வரவழைத்து என்ன வேண்டும் என்று பணிவுடம் கேட்டு கொண்டுஇருந்தார். அதே நேரத்தில் வெந்த புட்டுகளை வாழை இலையில் சிறிது நாட்டு சக்கரை மற்றும் தேங்காய் தூவி கட்டி கொடுத்தார்.


ஒரு புட்டு வேக ஐந்து நிமிடத்துக்கு மேல் ஆனாலும் வரிசையில் நின்று கொண்டிருந்த அனைவரும் சலிப்பில்லாமல், புட்டு தயார் ஆவதையும், புட்டு கடை காரர் தேங்காய் உடைத்து தேங்காய் பால் மற்றும் தேங்காய் பூ எடுப்பதையும் பார்த்து கொண்டு இருந்தனர்.


நம்மவருக்கோ ஒரு குழப்பம்; அரிசி புட்டா, கம்பு புட்டா , கோதுமை புட்டா எது வாங்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்த சமயத்தில் கடை காரர் தேங்காய் தண்ணீரை ஒரு சிறிய வாளியில் சேகரித்து வருவதையும் கவனித்தான்.


அந்த நேரத்தில் வரிசை வேகமாக நகர்ந்தது , நம்மவருக்கு முன்பாக நின்று கொண்டு இருந்த ஒருவர் கசங்கின சட்டையும், அழுக்கான வேஷ்டியும் அணிந்திருந்தார் . கடை காரரிடம் ரெண்டு புட்டு தரும்படி சொன்னார், கடை காரர் புட்டு வேகும் சமயத்தில் அவரிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்க , அவரோ கட்டுமான தொழிலாளி என்றார். கடை காரர் உடனே வாளியில் இருந்த தேங்காய் தண்ணீரை ஒரு க்ளாசில் ஊற்றி அவரை குடிக்க சொன்னார். வேண்டாம் என்று தொழிலாளி மறுக்க , கடைக்காரரோ இது உங்களை போல களைப்பாக வருபவர்களுக்காக தான் நான் எடுத்து வைத்துள்ளேன் என்றார்.


உடனே வாங்கி குடித்த அவர், இன்னும் ரொம்ப தூரம் சைக்கிள் ல போகணும் ரொம்ப நன்றி , மதுரையில் வெயில் இன்று ரொம்ப ஜாஸ்தி என்றும் ; இந்த புட்டு தன் பிள்ளைகளுக்காக வாங்கி செல்கிறேன் என்றார். அவர் சொன்ன நன்றியை காதில் விழுந்தாலும் விழாதது போல் இருந்த கடைக்காரர், அவருக்கு அளித்த புட்டில் அதிக அளவு தேங்காயும், கொஞ்சம் அதிகமான சர்க்கரையும் போட்டு பார்சல் கட்டியது போல் நம்மவனுக்கு தோன்றியது.


புட்டுகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் நம்மவனுக்கு அந்த எளிமையான புட்டு கடை முதலாளி பற்றிய யோசனைதான் . தினம்தோறும் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களில் எத்தனை பேர் தங்களது தின பணிகளை சந்தோஷமாகவும் , ஆத்ம திருப்தி உடனும் செய்வதுடன் , அதே நேரத்தில் தங்களால் இயன்ற உதவியை எந்த பலனும் எதிர்பாராமல் பலருக்கு செய்து வாழ்ந்துவரும் ஒவ்வொருவரும் நாட்டின் ராஜாக்களை விட மேல் பட்டோரே ! ராஜாக்களின் காலம் முதல் இன்று வரை சாமானியர்களின் கதைகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏன் என்றால் ஒரு சாமானியனுக்கு அப்புகழ் தேவையும் இல்லை.






 
 
 

2 Comments


nareshravi88
nareshravi88
Oct 16, 2022

Good one!!

Like

shrilagg7
Oct 16, 2022

அருமை 😊

Like

Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2020 by Guru Shankar Muthu Raj. 

bottom of page